கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு தடையில்லை -முல்லை நீதிமன்றம்- - Yarl Voice கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு தடையில்லை -முல்லை நீதிமன்றம்- - Yarl Voice

கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு தடையில்லை -முல்லை நீதிமன்றம்-

இராணுவம் கைப்பற்றிவைத்துள்ள பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவ கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறின்றி தொடர முடியும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கேப்பாபுலவில் போராட்டம் மேற்கொண்ட மக்களுக்கு எதிராக முள்ளியவளை பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் இன்று 351ஆவது நாளாகவும் தொடர்கிறது.

படையினர் அபகரித்துள்ள இம்மக்களின் காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. குறித்த காணிகளுக்குள் கடந்த முதலாம் திகதி மக்கள் சென்றனர்.

இப்பகுதியில் 104 குடும்பங்களுக்குச் சொந்தமான மேலும் 181 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில், அக்காணிகளை விரைந்து விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியே மக்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 4ஆம் திகதி கொண்டாடப்பட்ட சுதந்திரத் தினத்தன்று, கேப்பாபுலவில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஆலயத்துக்கு மக்கள் செல்ல முயற்சித்தனர். இதன்போது முள்ளியவளை பொலிஸாருக்கும் மக்களும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கேப்பாப்புலவு மக்களில் ஐவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேப்பாப்புலவு மக்கள் ஜனநாயக உரிமைக்காக போராடலாம் என்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாது மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post