நிரந்தர சமாதானத்திற்க்கு புதிய அரசியல் சாசனம் கட்டாயம் -இரா.சம்பந்தன்- - Yarl Voice நிரந்தர சமாதானத்திற்க்கு புதிய அரசியல் சாசனம் கட்டாயம் -இரா.சம்பந்தன்- - Yarl Voice

நிரந்தர சமாதானத்திற்க்கு புதிய அரசியல் சாசனம் கட்டாயம் -இரா.சம்பந்தன்-

நாட்டில் சமத்துவத்தின் அடிப்படையில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் ஒரு புதிய அரசியல் சாசனம் கட்டாயம் தேவை என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


வாழைச்சேனை பிரதேச சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கண்ணன்கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-


இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் அரசியல் சாசனம் தேவை. நாடு பல கோணங்களில் பாரிய பின்னடைவுகளை அடைந்திருக்கின்றது. மனித உரிமை, அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக மாத்திரமல்ல, பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை அடைந்திருக்கின்றோம்.


தாங்க முடியாத கடன் சுமையை இந்த நாடு எதிர்நோக்கி வருகின்றது. இந்நாடு முன்னேற்றமடைய வேண்டுமாக இருந்தால் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கப்பட வேண்டும். இந்த நாட்டில் நிரந்தரமான சமாதானம் ஏற்பட வேண்டும். பாரிய வெளிநாட்டு முதலீடுகள் இடம்பெற வேண்டும்.


இதன்மூலமாக உற்பத்திகள் அதிகரித்து இதன் மூலம் பொருளாதாரம் முன்னேற்றமடைய வேண்டும். இதனையடைவதற்கு ஒரு புதிய அரசியல் சாசனம் தேவை. நாட்டில் சமத்துவத்தின் அடிப்படையில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் ஒரு புதிய அரசியல் சாசனம் கட்டாயத் தேவை.


ஐக்கிய நாடுகளினுடைய மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2012ம், 2013ம், 2014ம், 2015ம், 2017ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை அமுல்படுத்த வேண்டும் என்ற நிலையில் தற்போது நாடு இருக்கின்றது.


2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு நீட்டிக் கொண்டது. தீர்மானங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சில நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் எதைக் கூறுகின்றது உண்மையில் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும். பொறுப்புக் கூறல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும். காணாமல் போனோர் சம்பந்தமாக விடிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஒரு அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மீள இடம்பொறாமல் இருப்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் தேசிய பிரச்சனைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவைகள் தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்த தீர்மானங்களை அமுல்படுத்துவற்கு இலங்கை அரசாங்கம் சம்மதத்தினை வழங்கியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post