திருவெம்பா விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபை ஆண்டுதோறும் நடத்தும் ஈழத்துச் சிதம்பர பாத யாத்திரை எதிர்வரும் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. வழமைபோன்று இவ்வருடமும் வடக்கு, கிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மகேசன் பணிக்காய் அர்ப்பணித்து மானிடம் காப்போம்' என்ற தொனிப்பொருளுடன் இடம்பெறவுள்ள இவ்வருட பாத யாத்திரை ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு சம்பில்துறையில் சைவ மகா சபையால் நிர்மாணிக்கப்பட்ட 21 அடி உயர சிவபெருமான் திருச்சொரூப முன்றலில் இருந்து ஆரம்பமாகும்.
அங்கிருந்து சாந்தை சிதம்பரேஸ்வரர் ஆலயம், சாந்தை வீரபத்திரர் ஆலயம், பனிப்புலம் முத்துமாரி அம்மன் ஆலயம், சுழிபுரம் பறாளாய் முருகன் மற்றும் ஈசுர விநாயகர் ஆலயங்கள், சுழிபுரம் மத்தி கறுத்தனார்தோட்டம் துர்க்கை அம்மன் ஆலயம், சுழிபுரம் மேற்கு அரிகரபுத்திர ஐயனார் ஆலயம், சுழிபுரம் மேற்கு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம், சுழிபுரம் பெரியபுலோ ஞானபைரவர் ஆலயம், மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர், முருகன் ஆலயங்கள், மூளாய் இராவணேசுவரம், வலந்தலை மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயம், கிழவன்காடு முருகன் ஆலயம், முதலான ஆலங்களைத் தரிசித்தவாறு ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடையும்.
பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு பொன்னாலைச் சந்தியில் உள்ள நாராயணன் தாகசாந்தி நிலையத்தினரால் அன்னதானம் வழங்கப்படும்.
பாத யாத்திரையில் பங்குகொள்ளும் அடியார்கள் அன்றைய தினம் காலை 7.00 மணிக்கு முன்பாக சம்புநாதஈஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தருமாறு சைவ மகா சபை கேட்டுக்கொண்டுள்ளது.
Post a Comment