ஆக்ராவில் புகழ்பெற்ற உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உள்ளது. இன்று காலை தாஜ்மஹாலுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் வந்ததை தொடர்ந்த தாஜ்மஹால் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
மர்ம நபர் ஒருவர் உத்தரபிரதேச காவல்துறையின் போலீஸ் கட்டுப்பாடு அறை எண்ணான 112 யை காலை 9 மணியளவில் தொடர்பு கொண்டு தாஜ்மஹாலுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி உள்ளார்.உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது.
உடனடியாக தாஜ்மஹால் நினைவுச்சின்ன வளாகத்தை காலி செய்யுமாறு பார்வையாளர்கள் கேட்டு கொள்ளபட்டனர். காலை 9:15 மணியளவில் வெடி குண்டுசோதனைகளை மத்திய தொழில்பாதுகாப்பு படை தொடங்கினர்.
"சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, சோதனைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன" 11 மணிக்கு மேல் சிறிது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர் என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் உத்தரபிரதேசத்தில் உள்ள ஃ\பிரோசாபாத்தில் இருந்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கும் மேலாக கொரோனா ஊரடங்கால் மார்ச் 17 முதல் மூடப்பட்டு இருந்த தாஜ்மஹால் பின்னர் கடுமையான கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் கடந்த செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
ஏ.எஸ்.ஐ மதிப்பீடுகளின்படி, தாஜ்மஹாலை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70-80 லட்சம் சுற்றுலாபயணிகள் பார்வையிடுகிறார்கள். இதில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளனர், அவர்கள் வழக்கமான சர்வதேச போக்குவரத்து மீண்டும் தொடங்கும் வரை வர வாய்ப்பில்லை. ஆக்ரா கோட்டைக்கு ஆண்டுக்கு 30 லட்சம் பார்வையாளர்கள் வருகிறார்கள்.
Post a Comment