இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி சுதந்திர தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர், மூவர்ண கொடியை அவர் ஏற்றி வைத்தார். பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்ததும், விமானப்படையை சேர்ந்த இரண்டு Mi-17 ரக விமானங்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காவல்துறையினர், ராணுவம், தேசிய பாதுகாப்பு படையின் ஸ்னைப்பர் பிரிவு, ஸ்வாட் கமாண்டோக்கள் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Post a Comment