நல்லூர் திருவிழா காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களை நீக்க வஏண்டுமென கோரிக்கை! - Yarl Voice நல்லூர் திருவிழா காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களை நீக்க வஏண்டுமென கோரிக்கை! - Yarl Voice

நல்லூர் திருவிழா காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களை நீக்க வஏண்டுமென கோரிக்கை!



நல்லூர்க் கந்தன் ஆலய திருவிழா காலத்தில் அடியவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை நீக்க வேண்டுமென இந்து தன்னார்வ தொண்டர் சங்கம் யாழ் மாநகச சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இந்து தன்னார்வ தொண்டர் சங்கத்தின் தலைவர் தேவசாரங்கன் யாழ் மாநகர சபை ஆணையாளருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

யாழ் மாநகர சபையானது நல்லூர் ஆலய நிர்வாகத்துடன் இணைந்து ஒருமாதகால திருவிழாவை கடந்த காலங்களில் மன நிறைவாக நடாத்தியமை மகிழ்ச்சியை தருகிறது,

எனினும் கடந்த ஆண்டின் நல்லூர் திருவிழா காலத்தில், ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்களுக்கு ஏற்பட்ட  அசௌகரியங்கள் குறித்த தகவல்களை பத்திரிகை செய்திகள் மற்றும் பக்தர்கள் தெரிவித்த அதிருப்தி கருத்துகள் மூலம் அறிந்து கொண்டோம்.

பரிசீலனை செய்யப்பட்ட அனுபவங்கள் மற்றும் பத்திரிகை  தகவல்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு அளவுக்கு  அதிகமான வீதித்  தடைகள்  பொருத்தமற்ற பகுதிகளில்  அமைக்கப்பட்டதால் அடியவர்கள் சன நெரிசலுக்கு உட்பட்டு மயக்கம் அடைந்து பெரும் அவலத்தை சந்தித்தனர். அவசரமான நேரத்தில் நோயாளர்காவு வண்டி கூட நுழைய முடியாத நிலை காணப்பட்டது . 

மேலும், கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமான கடைகள் வியாபாரதரர்களுக்காக குத்தகைக்கு வழங்கப்பட்டன, இதனால் பொதுமக்கள் நடமாட முடியாமல் வீதியின் மத்திய பகுதிக்கு தள்ளப்பட்டனர்.

 குறிப்பாக சப்பர திருவிழா நாளில் ஏற்பட்ட நெருக்கடியின் போது நடைபாதையில் நகர்ந்து கொண்டிருந்த பக்தர்களை வியாபாரிகள் "எங்கள் கடைகளுக்குள் வர வேண்டாம், நாங்கள் காசு கொடுத்து தானே கடைகளைப் பெற்றுள்ளோம்" என வீதியின் நடுப்பகுதி நோக்கி விரட்டியதை கண்ணூடு பார்க்க முடிந்தது. 

தொடர்ச்சியான வீதிதடைகளுக்கு இடையில் நடைபாதையின் இருபுறமும் வியாபார நிலையங்களால் ஆக்கிரமிக்கப்படிருந்த சூழ்நிலையில் பெருமளவு மக்கள் தெருவின் நடுப்பகுதியில் அபாயகரமான விதத்தில் சிக்குண்டு இருந்தனர். 

நூற்றாண்டு காலம் கடந்த நல்லூர் ஆலய மாண்பானது கெடும் வகையில் கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களும்,கிண்டல்களும் கண்டு பெரும் மன வேதனையடைந்தோம். 

இந்த வியாபார ஸ்தலங்கள் மற்றும் விளம்பரங்கள் மெய் அடியவர்களின் ஆன்மீக உரிமைகளை, ஆலயத்தின் புனித தன்மையையும் குலைக்கின்றன. எனவே, இந்து தன்னார்வ தொண்டர் சங்கம் சார்பாக, கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:

அடியவர்களிற்கு இடையூறற்ற வீதி தடைகள் : 

ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களுக்கு நெரிசலற்ற மற்றும் சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்தும் வகையில், அடியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இலகுவாக நகரக்கூடிய விதத்தில் வீதிதடைகளை அமைத்தல், மற்றும் பொருத்தமற்ற தடைகளை நீக்கல்.

வியாபாரஸ்தலங்கள்  மற்றும் விளம்பரங்களுக்கு அனுமதியளிக்காமை: 

வியாபார ஸ்தலங்கள் மற்றும் விளம்பரங்கள் மெய் அடியார்களின் வழிபாட்டுரிமைக்கும் பக்திமயமான சூழ்நிலைக்கும் இடையூறாக அமைவதால், திருவிழா காலத்தில், ஆலய சுற்றுப்புறங்களில் கடைகள் மற்றும் வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்காமல், மக்கள் அமைதியாக வழிபாட்டை மேற்கொள்ளும் வகையில்   நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அவசர உதவிகள்: 

கடந்த ஆண்டை போல் அல்லாமல் நோயாளர் காவுவண்டி மற்றும் அவசர சேவைகள் தேவையான இடத்தை இடையூறின்றி அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி நல்லூர் ஆலய சூழலில் ஆன்மீக சூழலை நிலை நாட்டவேண்டி மெய்  அடியார்கள் சார்பாக இந்து தன்னார்வ தொண்டர் சங்கம் கோரிக்கெ விடுப்பதாக அந்த கடித்த்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
             

0/Post a Comment/Comments

Previous Post Next Post